புதன், செப்டம்பர் 17, 2003

ஏனிந்த வலைப்பதிவு?

blogகளைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒரு அரிப்பு. ரேடியோவில் SPB பாடும்போது கூடவே குறைந்த சத்தத்தில் பாடி, குரல் கிட்டத்தட்ட SPBக்கு மேட்ச் ஆவதாக எண்ணிக்கொண்டது ஞாபகம் வருகிறது. கொஞ்சம் தைரியம் வந்து ரேடியோவை ஆஃப் பண்ணி தனியாகப் பாட முயற்சிக்கும்போது தான் நம் சாரீரம் எவ்வளவு வளமையானது என்பது உறைத்தது. சங்கீதம் எத்தனை ஆழமான விஷயம் என்பது புரிந்தது.

ஆனாலும் இந்த SPB ரொம்ப மோசம். TMS கூடத்தான் எத்தனையோ பாட்டுப் பாடினார், ஆனால் ஏனோ தெரியவில்லை அவர் பாட்டைக்கேட்டு ரசிக்கத்தான் தோன்றியது, கூடப்பாடத் தோன்றவில்லை, அது நமக்கு வராது என்பது தெளிவாகத் தெரிந்தது. TMS பெரும்பாலும் MGR, சிவாஜிக்காகவே குரல் கொடுத்ததால் ஒருவேளை என்னால் அவர் குரலுடன் ஒட்ட முடியாமல் போயிருக்கலாம். இந்த SPB அப்படியில்லை. கூடப்பாட இழுக்கும் குரல். 'இது ஒன்றும் அவ்வளவு பிரம்ம வித்தையில்லை, உன்னால் முடியும் தம்பி', என்று எண்ணவைக்கும் குரல். ஆனால் பாடிப்பார்த்தால் தெரிகிறது, அது எப்பேற்பட்ட மாயை என்று. சொல்லப்போனால் அதில் தான் அவர் வெற்றியே இருக்கிறது.

அதுபோலவே தான் இந்த வலைப்பூக்களைப் பார்க்கும்போதும். இத்தனை பேர் இத்தனை எளிதாய் (உண்மையிலேயே எளிதா என்பது இனிமேல் தெரிந்துவிடப்போகிறது!) எவ்வளவு விஷயங்களை அலசுகிறார்கள். நாமும் ஏன் முயலக்கூடாது என்று ஒரு அரிப்பு. முகம் தெரியாமல் ஒளிந்துகொண்டு 'தைரியமாக' எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதி. வெட்கம், சங்கோஜம், பயம், அவநம்பிக்கை இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு தோன்றியதை உரக்கக் கத்த இதை விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா? ஆகவே ஆரம்பிக்கிறேன், கற்றோரே, பெரியோரே, வாழ்த்தி வரவேற்பீர்!

சரி, என் இந்த வலைப்பூ மாலைக்கு ஒரு தலைப்பு வைத்தாயிற்று. அதற்கு விளக்கம் தர வேண்டாமா? நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நான் சொல்லத்தான் போகிறேன்.

நான் சித்தூர்க்காரன். இரண்டு விதத்தில். என் சொந்த ஊர் 'வடசித்தூர்'. கோவை-பொள்ளாச்சி வட்டாரம். அது வெறும் சித்தூராகத்தான் இருந்திருக்கவேண்டும். இந்த 'சோமந்துரை சித்தூர்'க்காரர்களுக்கும் எங்க ஊர்க்காரர்களுக்கும் இடையே குழப்பம் இல்லாமல் இருக்க, இந்தப் பொள்ளாச்சிக்காரர்கள்தான் அதை வடசித்தூர் ஆக்கியிருக்கவேண்டும். இன்னொன்றை ஏன் 'தென்சித்தூர்' என்று சொல்லவில்லை என்பதற்கு நான் ஜவாப்தாரியில்லை. ஆகக்கூடி, நான் சித்தூர்காரன். இன்னொரு விதத்தில் கிராமத்தான். எனவே அந்த வகையிலும் சிற்றூர்க்காரன்.

என் சிந்தனை அவ்வளவு தெளிவாக இருக்காது. மனம் ஒரு 'மப்'படித்த குரங்கு என்பதை உணர்ந்து கடைப்பிடிப்பவன்; எனவே என் சிந்தனை சிதறிக்கொண்டே இருக்கும். இதை முன்னமே பறையடித்துக்கொள்வதில் ஒரு வசதி, கோர்வையாக எதையும் எண்ணவேண்டியதில்லை, எழுதவேண்டியதில்லை.

அப்பாடா, எப்படியோ தேவையான அலபை கிடைத்துவிட்டது, இனி சுதந்திரமாய் எதை வேண்டுமானாலும் எழுதலாம். என்ன வேண்டுமானாலும் தொடலாம்...அதெல்லாம் சரி என்னதான் எழுதப்போகிறேன்? அதை இனிமேல் தான் யோசிக்கவேண்டும். பார்க்கலாம்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

what???? you wrote your blog in 2003? thats awesome man!!

We really missed you :(

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...