திங்கள், செப்டம்பர் 22, 2003

காலங்கடந்த 'நீதி'

மாவட்ட நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதி மன்றம் தலைகீழாக மாற்றுவதைக் கண்டிருக்கிறோம். அதை உச்ச நீதிமன்றம் மீண்டும் மாற்றி எழுதுவதையும் பார்க்கிறோம். அப்படியானால் இதில் யார் சரி? இது பதில் சொல்ல முடியாத கேள்வி. மாற்றி எழுதப்பட்டதனாலேயே ஒரு நீதிமன்றம் தந்த தீர்ப்பு தவறாகி விடுமா? யார் அதிகாரம் படைத்தவர்களோ அவர்கள் சொல்வதே சரியாகிறது. மாவட்ட நீதிபதியை விட உயர் நீதிமன்ற நீதிபதி அதிகாரம் படைத்தவர். அவரை விட உச்ச நீதிமன்ற நீதிபதி அதிக அதிகாரம் படைத்தவர். சிங்கிள் பெஞ்ச்சை விட டிவிசன் பெஞ்ச், அதைவிட ஃபுல் பெஞ்ச் அதிகாரம் படைத்தது. (நன்றி: நண்பர் சுபாஷ், இந்த வார்த்தையெல்லாம் அவர் வாயால் சொல்லிக் கேட்டிருக்கிறேன்) அவ்வளவுதான் உண்மை. அதற்குமேல் இதில் உண்மையைத் தேட முடியாது.

இந்தவாரத்தில் முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடப் போகிறது டான்சி வழக்கின் தீர்ப்புக்கான காத்திருப்பு. இதில் சட்டப்படி என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வரலாம். சும்மா ஒரு வாதத்திற்காக செல்வி JJவுக்கு எதிரான தீர்ப்பு வருவதாகக் கொள்வோம். அதை நம் ஜனநாயகம் எப்படி நேர்கொள்ளப் போகிறது? ஒரு வருடம் முன்பே முடிந்து விட்டது வழக்கு விசாரணை. நீதி வழங்கலுக்கு இந்தக் காத்திருப்பு எந்த விதத்திலாவது உபயோகம் ஆகியிருக்குமா? கனம் நீதிபதிகள் கனமான சட்டப் புத்தகங்களை மீண்டும் மீண்டும் படித்து சிறப்பான தீர்ப்புத்தர இந்த நேரம் உபயோகப் பட்டிருக்குமா? என்னால் ஆம் என்று கூற முடியவில்லை. ஆனால் இந்த கால தாமதத்தினால் ஒரு குற்றவாளி தண்டனை பெறுவது தள்ளிப் போனது என்பது மட்டும் இல்லாமல், அவரால் ஆளப்பட்ட ஒரு மாநில மக்கள் அனைவரும் இந்த ஒரு வருடமும் தண்டனை பெற்றார்கள் என்று தான் கருதவேண்டும். சிறைக்குள் இருக்க வேண்டிய ஒருவரால் ஒருவருடம் (அதுவும் ஏதேச்சதிகாரமாய்) ஆளப்பட்ட மக்களை வேறு என்னவென்பது? இந்தத் தண்டனை யாரால்? கனம் நீதிபதிகளால், ஏன்? அவர்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு தேவைக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொண்டதால். இந்தப் பழியை கனம் நீதிபதிகள் உதற முடியுமா?

மாறாக, செல்வி JJவுக்கு சாதகமான தீர்ப்பு வருவதாக வைத்துக் கொள்ளுவோம். அதனால் எந்தப் புரட்சியும் நடக்கப் போவதில்லை. வேண்டுமானால் சில குரல்கள் அந்தத் தீர்ப்பை விமர்சித்து எழலாம். அவர்களும் எங்கே தங்கள் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்துவிடுமோ என்று பயந்து பயந்து மேம்போக்காய் எழுதுவார்கள். இந்தப் பின்னணியில் இந்தக் காலதாமதம் யாருக்கும் பெரிதாய் தெரியப் போவதில்லை. இது நீதிபதிகளுக்கு எந்தப் பழியையும் கொண்டு வரப் போவதில்லை.

ஆகவே, கனம் நீதிபதிகள் இந்த பாதுகாப்பான தீர்ப்பைத் தான் தரப் போகிறார்கள் என்று சொல்வேன். நீதியரசர்கள் என்னென்ன வெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது! நம் பாடு தேவலை. என்னை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருக்கச் சொன்னால் நான் மாட்டேன் என்று ஓடி வந்து விடுவேன் :-)

முன்பெல்லாம் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கிறதோ இல்லையோ, தீர்ப்பு கட்டாயம் கிடைத்தது, இப்போது அதற்கும் பஞ்சம்!

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...