புதன், அக்டோபர் 01, 2003

திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 2


முன்பு பலமுறை என் சக மேலாளர்களுடன் உரையாடும்போது, எங்கள் பேச்சு எங்கள் நிறுவனத்தில் பகிர்ந்தளித்தல் (Delegation) போதுமான அளவுக்கு இல்லை என்று குறைப்பட்டுக் கொள்வதாக இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சூழலுக்குப் பொருத்தமான நிர்வாகப் பகிர்வு அமைப்பை வைத்துக்கொள்ளுகின்றன. எது சரி எது சரியில்லை என்பது நிறுவனத்தின் வெற்றி தோல்வியை வைத்துத்தான் கணிக்க வேண்டியிருக்கிறது. நமக்குப் பிடித்தவண்ணம் இருக்கிறதா என்பதைவிட இதைக்கொண்டு எப்படி சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்று சிந்திப்பவரே வெல்லுகிறார்.

சரி, இந்த பகிர்ந்தளித்தல் பற்றி அய்யன்(?) திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்த்தால்,

இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (514)


பொருட்பால், அரசியல், தெரிந்து வினையாடல்

இதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை. பெரும்பாலான குறட்பாக்கள் தானே விளங்கிக் கொள்ளும்படியாகத் தானே இருக்கின்றன! 'இந்தச் செயலை, தன்னிடமிருக்கும் ஆற்றல், செல்வம், திறமை போன்ற இவற்றால், இவன் செய்து முடிப்பான் என்பதை ஆராய்ந்து, அப்படிப்பட்ட செயலை அவனிடத்தில் விட்டுவிட வேண்டும்' என்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் எண்ணற்கரிய எதையும் சொல்லுவது போல் தெரியவில்லை. ஆனால் மூன்று முக்கியமான சொல்லாடல் மூலம் சொல்ல வந்த கருத்தை ஆழமாகச் சொல்லியிருப்பதாக எனக்குப் படுகிறது.

ஒரு வாதத்திற்காக இப்படி மாற்றிச் சொல்லிப் பார்ப்போமே:
இதனை இதனான் இவன்செய்யும் என்றோர்ந்து
அதனை அவன்கண் கொடல்.

(ஓர்ந்து - எண்ணி)

இதுவும் கிட்டத்தட்ட அதே கருத்தைச் சொல்லுவது போல இல்லை?

மூன்று இடங்களில் சொற்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அவை
1. முடிக்கும் - செய்யும்
2. ஆய்ந்து - ஓர்ந்து
3. விடல் - கொடல்
இந்த மூன்று இடத்தில் தான் நிர்வாகப் பகிர்ந்தளித்தலின் அடிப்படையைத் தொட்டு விடுகிறான் அய்யன்.

ஒன்று, இந்தக் காரியத்தை இவன் செய்வான் என்று பார்த்தால் போதாது, இவன் 'முடிப்பானா' என்று பார்க்க வேண்டும்.
இரண்டு, அந்த வண்ணம் பார்க்கும்போது, அவனின் தகுதியை, கைக்கொண்ட ஆற்றல், செல்வம், திறமை (Means என்ற ஆங்கிலப் பதத்திற்கு ஈடான தமிழ்ப்பதம் என்ன, தெரியவில்லையே!) இவற்றை எண்ணிப்பார்த்தால் போதாது, 'ஆராய்ந்து' பார்க்க வேண்டும்.
மூன்று, அப்படி ஒருத்தனிடத்தில் ஒப்படைக்க முடிவு செய்தபின் அவன் கையில் கொடுத்தால் மட்டும் போதாது, அவனிடத்தில் 'விட்டுவிட' வேண்டும்.

இந்த மூன்றாவது ஒன்றிற்காகவே இந்தக் குறள் எனக்கு மிகவும் பிடிக்கும்!

ஒண்ணேமுக்கால் அடியில் சொன்னாலும் ஒருபக்கம் எழுதிச்சொல்லவேண்டியதை அழுத்தம் திருத்தமாய் சொல்பவனுக்கு ஒரே பெயர் தான் இருக்கமுடியும், அவன் தான் வள்ளுவன்! வாழ்க அவன் வாக்கு!

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...