புதன், அக்டோபர் 15, 2003

ஆப்பிள் சொல்லும் பாடம்

என் மகன் (அரிச்சந்திரன் மகன்:-)

பஜ்ஜி எதிலெல்லாம் பண்ணலாம்? வாழைக்காய் என்று டைப் அடித்தாலே கை பஜ்ஜி என்று அடிக்கத் துடிக்கிறது. அந்த அளவிற்கு பஜ்ஜிக்கும் வாழைக்காய்க்கும் பந்தம். அடுத்து வெங்காயத்தைச் சொல்லலாம். அப்பள பஜ்ஜி அவசர பஜ்ஜி. மிளகாய் பஜ்ஜி கண்ணீர் பஜ்ஜி. ஆப்பிள் பஜ்ஜி?

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் ஒருநாள் கேகே நகர் சரவணபவனில் ஆப்பிள் பஜ்ஜி சாப்பிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போது சரவணபவன் என்றாலே வேறு என்ன என்னவோ நினைவுக்கு வருகிறது. அன்று 'இன்றைய ஸ்பெஷல்' போர்டில் ஆப்பிள் பஜ்ஜியைப்பார்த்து என்னவோ புதுமையாய் இருக்கும் என்று (அன்றே விலை பையைக் கடித்தது) ஆர்டர் பண்ணி, பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை வைத்து விட்டு வந்தவன் தான் பல மாதங்கள் சரவண பவனுக்கும் போகவில்லை, ஆப்பிள் பழமும் சாப்பிடவில்லை. இனிப்பும் புளிப்பும் கலந்த ஆப்பிளுக்கும், உப்பும் காரமும் கலந்த மாவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவர்கள் தான் புதுமை, ஆடம்பரம் என்று எதையாவது செய்தார்களென்றால் எனக்கெங்கே போனது புத்தி?

அதற்கடுத்துப் புதுமையாக இப்போது எங்கள் வீட்டில் ஆப்பிள் ஊறுகாய் ஊறிக் கொண்டிருக்கிறது. என்னடா மறுபடியும் புத்தியில்லையா என்று நினைக்காதீர்கள். சென்ற வார இறுதியில் ஆப்பிள் தோட்டத்துக்குப் போய் வந்ததின் ஒரு விளைவு இது.

பொன்னிறத்தில் பரங்கிக்காய்கள்

சாறு செறிந்த விதம் விதமான ஆப்பிள்களை, கையால் பறித்து, நறுக் நறுக்கென்று கடித்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை எத்தனை நாளாய் மனசை குடைந்து கொண்டிருந்தது! சிறுவயதிலிருந்து ஒவ்வொரு சினிமா பார்க்கும்போதும் முதலில் வந்து, மனப்பாடம் ஆகிவிட்ட 'வஜ்ரதந்தி, வஜ்ரதந்தி, விக்கோ வஜ்ரதந்தி...', அதில் பல்லைக் காட்டிகொண்டு ஒரு பெண் சரக்கென்று ஒரு ஆப்பிளைப் பறித்து கடிக்கும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் ஒருநாள் இப்படி ஆப்பிளைக் கடிக்க மாட்டோ மா என்று ஏக்கமாயிருக்கும். எனவே இப்போது அமெரிக்க சித்தூரில் இதோ கூப்பிடுதூரத்தில் (உள்ளுர் தொலைபேசியில் கூப்பிடுதூரம், ஹி ஹி) ஆப்பிள் தோட்டம், அங்கு போனால் எத்தனை பழம் வேணுமானாலும் பறிக்கலாம், கடிக்கலாம், சுவைக்கலாம்; திரும்பி வரும்போது பையில் உள்ள ஆப்பிளுக்கு மட்டும் பவுண்டுக்கு 40 சென்ட் கொடுத்தால் போதும் (நல்லவேளை நம்மை எடை போட்டுப் பார்ப்பதில்லையாம்) என்று கேள்விப்பட்டவுடன் சும்மா இருக்க முடியவில்லை.

இந்த மாதிரி விஷயம் என்று கேள்விப்பட்டதுதான் தாமதம், 'நானும் வர்ரேன்' என்று ஒன்று, இரண்டு..மொத்தம் ஆறு குடும்பங்கள் அணிவரிசை ஆகிவிட்டது. கிளம்பினோம். பூந்து விளையாடிடணும் என்று தீர்மானம் செய்துவிட்டேன். முதல் ஆப்பிள் முழுசாய் சாப்பிட்டேன், அடுத்த ஆப்பிள் அரை வாசிக்கு மேல் உள்ளே போகவில்லை திகட்டியது. அடுத்த வகை வேறு மாதிரி இருக்குமே என்பதற்காக மூன்றாவது ஆப்பிளை ஒரு கடி. அவ்வளவுதான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், ஆப்பிள் அஞ்சு கூட இல்லை. ஆப்பிளைப் பார்த்தாலே வெறுக்க ஆரம்பித்துவிட்டது.

உலகமே இப்படித்தான். எல்லாமே தூரத்தில் இருந்து பார்க்கும்போது தான் பெரிய விஷயம். ஒன்றை அடையவேண்டும், அதற்காக எவ்வளவு மெனக்கெட்டாலும் பரவாயில்லை என்று இருக்கும். அது கிடைத்தவுடன், அட இவ்வளவு தானா என்று இருக்கும். இது இந்த மண்டைக்கு உறைப்பது இது முதல் முறையல்ல. ஆனாலும் இப்படி நிறைய விஷயங்கள் இன்னும் ஆளை ஈர்த்தபடியேதானே இருக்கின்றன! ஒருவிதத்தில் இந்த ஈர்ப்பு தானே வாழ்க்கையின் உயிர்நாடி என்றும் தோன்றுகிறது. இப்படி சின்னச்சின்ன ஆசைகள் விருப்பங்கள் தானே வாழ்க்கையை இன்னும் அலுக்காமல் வைத்திருக்கின்றன.

திராட்சைப்பழம் கிடைக்காமல் போனதால் நரி 'சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்' என்று சொல்லிப் போன கதை தெரியும். எண்ணிப் பார்த்தால் கொத்து திராட்சைப்பழம் கிடைத்திருந்தாலும் அது அப்படித்தான் சொல்லியிருக்கும் என்று நினைக்கிறேன். (அதெல்லாம் சரி, நரி சாக பட்சிணியா மாமிச பட்சிணியா, திராட்சையெல்லாம் சாப்பிடுமா? அதைக் கண்டுபிடிக்கணும்

எத்தனை ஆப்பிள் விரயம்?

அங்கு ஆப்பிள் தோட்டத்தில் மனத்தை உறுத்திய இன்னொரு விஷயம், ஒவ்வொரு மரத்தடியிலும் ஒரு 50 பழங்களாவது வீணடிக்கப் பட்டுக் கிடந்ததுதான். ஒரு வரிசைக்கு 30 மரங்களாவது இருக்கும், இப்படி ஒரு கூட்டத்தில் 20 வரிசை இருக்கும், அப்படியானால் ஒரு கூட்டத்தில் எத்தனை பழம் வீண்? 30000? இப்படி அந்தத் தோட்டத்தில் ஒரு 4-5 ஆப்பிள் கூட்டங்கள் இருந்தன, அப்படியானால் மொத்தம் வீணடிக்கப்படும் பழங்கள்...ஒரு லட்சத்திற்கும் மேல்! மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. இதெல்லாம் இந்த நாட்டில் தான் சாத்தியம். எத்தனை பேர் நம்மூரில் வருடத்திற்கு ஒரு ஆப்பிளுக்கும் குறைவாக சாப்பிடுபவர்கள்? இந்தியாவில் இருக்கும்வரை எங்கள் வீட்டிலேயே ஒரு ஆப்பிளை ஒருவர் மட்டும் சாப்பிடுவது மிக அபூர்வம், சொல்ல வெட்கப்படவில்லை. உலகில் ஏனிந்த ஏற்றத் தாழ்வு? பதில் தெரியாத கேள்விகள்.

அதெல்லாம் சரி, அதென்ன ஆப்பிள் ஊறுகாய்?

நெல்லிக்காய் ஆப்பிள் (crab apple)

நெல்லிக்காய் சைசில் ஆப்பிள் ஒரு மரத்தில் கொத்து கொத்தாய் காய்த்திருந்தது. பறித்து சுவைத்ததில் அப்படியொரு புளிப்பு. அசல் நெல்லிக்காய் புளிப்பு, ஆனால் ஆப்பிள் மணம், வடிவம், நிறம், கவர்ச்சி! இங்கேதான் எதில் R&D பண்ணலாம் என்று மண்டையில் எப்போதும் ஒரு அரிப்பு ரெடி ஸ்டாக்காக இருக்குமே, சரி, ஆப்பிள் ஊறுகாய் போட்டுப் பார்த்துவிடலாம் என்று அதில் கொஞ்சம் கொண்டுவந்து, அதை அன்பு மனையாள் ஊறுகாயும் போட்டிருக்கிறாள். இது வெற்றியா இல்லை ஆப்பிள் பஜ்ஜி கதையாகப்போகிறதா என்று இன்னும் கொஞ்ச நாளில் தெரியும். வெற்றி என்றால் சொல்கிறேன்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...