சனி, அக்டோபர் 18, 2003

நான் இன்னும் வளரவே இல்லையா?

எனக்கு ஒரு நண்பர் குழாம். அந்தக் குழாத்தின் சராசரி வயது என்னைவிட சற்று அதிகம். அதற்குப் பெயரெல்லாம் கூட உண்டு. நான் அந்த நண்பர்களின் நெருங்கிய அண்மையிலேயே ஒரு ஏழு வருடம் இருந்தேன். இப்போது மூன்று வருடமாக வெளியில் இருக்கிறேன். ஆனால் மின்னஞ்சல் எங்களை அதே நெருக்கத்தில் வைத்திருக்கிறது (அல்லது அப்படி என்னை எண்ண வைத்திருக்கிறது). இந்தப் பத்து வருடத்தில் ஒவ்வொருவர் பணிபுரியும் மட்டம், அவரவர் குடும்பத்தில் நிகழ்வுகள் (இப்போது மூவர் வீட்டில் வயது வந்த பெண்கள்!) அவரவர் பொழுதுபோக்கு (இந்தியாவில் எத்தனை பேர் 'பொழுது போக்கும்' நிலையில் இருக்க முடிகிறது? பொழுது போதாமல் இருப்பதே நிதர்சனம்) என நிறைய மாறிப்போனது. ஆனால் நான் இன்னமும் அந்தப் பத்து வருடம் பின்னோக்கியே இருக்கிறேனொ என்று எனக்கு இப்போது ஒரு பயம், சந்தேகம்.

நான் வலைப்பூவெல்லாம் எழுதுகிறேன் என்று பெரிதாய் அலட்டிக் கொண்டு, இவர்களுக்கு குறிப்பாக மடல் அனுப்பி அதைப் படித்து கருத்துச்சொல்ல மீண்டும் மீண்டும் விரட்டுகிறேன். ஆனால் அவரவர் இருக்கும் இன்றைய நிலையில் ஓட்டமாய் ஒட வேண்டிய இன்றைய வாழ்க்கையில், இதற்கெல்லாம் எங்கு நேரம் என்பதை எண்ண மறந்தேன். அவர்களைக் கொஞ்சம் வருத்தி விட்டேனோ என்று தான் இப்போது மனதில் கூச்சமாய் இருக்கிறது.

இன்னொரு விதத்தில் எண்ணிப்பார்த்தால், எனக்கு அவர்களை நினைத்துப் வருத்தமாயும் இருக்கிறது. உழைத்து உழைத்து, இன்னும் ஓடி ஓடி கடைசியில் என்ன மிஞ்சப்போகிறது? வேலை வேலை என்ற சுழலில் இருந்து சற்று இளைப்பாறவாவது வேறு சிந்தனைகளை, கருத்துக்களை படிக்க, அலச மனதை அனுப்பினால் மனம் புத்துணர்வு பெறாதோ? கட்டாயம் சினிமா, TV என்று அவர்கள் மனமும் மாற்றுத் தளம் வேண்டி அலைந்து கொண்டுதானிருக்கும். ஏன் இந்த மாதிரி எண்ணமுடிவதில்லை? திரும்பிப்பார்த்தால், அந்த ஏழு வருடங்களும் நானும் அச்சு அசலாக இப்படித்தானிருந்தேன். அதே சுழலில் இருந்திருந்தால் அனேகமாக இப்படியே தான் இருந்திருப்பேன். ஆனால் அப்போதும் கொஞ்சமாவது மாற்றுச் சிந்தனைகள், தன் மன அலசல்கள் என்று நிச்சயம் என்னைப் புதுப்பித்துகொண்டேதான் இருந்தேன். பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி என்று நம்மை வந்து தாக்கும் பேருடகங்களிருந்து நம்மைக் காத்து, கொஞ்சமாவது சுயசிந்தனை உள்ளவராக வைத்துக் கொள்ள வலைப்பூ போன்றவை நிச்சயம் உதவும். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை 'தி ஹிந்து' படித்த 20 வருடத்திற்கு முந்திய நாட்களிலும், நான் 'ஆசிரியருக்குக் கடிதம்' படிக்காத நாளிருக்காது. அந்த 'வேறு என்ன அபிப்ராயம் இருக்க முடியும்?' என்ற ஆர்வமே, இன்று வலைப்பூக்களைத் தேடிப் பிடித்துப் படிக்க என்னை இட்டுச்செல்கிறது.

ஆகவே நாளெல்லாம் உழைப்பிலே உழலும் நேரமில்லாத என் நண்பர்களே, எனக்காக அல்ல, உங்களுக்காக உங்களைப் புதுப்பித்துக்கொள்ள படியுங்கள். பலம் வாய்ந்த ஊடகங்களின் தாக்குதலில் உங்களின் எண்ணக்கள் மழுங்கிப் போகமலிருக்கப் படியுங்கள். உங்கள் மூளைக்கு உணவு வேண்டின் படியுங்கள். வெங்கட்டைவிஷய கனத்திற்காகப் படியுங்கள், பத்ரியைப்பளிச் பளிச் அலசல்களுக்காகப் படியுங்கள், கண்ணனைஇளகிய மனத்துடன் உலகை உணருவதற்காகப் படியுங்கள், புலம் பெயர்ந்தும் நம் குலம் பெருமை பெற பலதும் செய்யும் சுபாவை, சந்திரவதனாவைப்படியுங்கள். இளைஞர்கள் பரி, மதி, ஹரன்எண்ண ஓட்டம் எப்படியென்று அறியப் படியுங்கள், கணினியில் தமிழ் தழைக்க இன்னும் பலர் பதியும் வலைப்பூக்களைப் படியுங்கள்.

நிச்சயமாய் உங்கள் வேலைப்பளுவின் இடையிலும் உங்கள் மூளைப்பளு குறைவதை உணர்வீர்கள்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...