வியாழன், அக்டோபர் 23, 2003

மயிலந் தீபாவளி

பொங்கல் என்றால் எல்லாருக்கும் குறைந்தது மூன்று நாள் கொண்டாட்டம் நினைவுக்கு வரும். ஆனால் தீபாவளி ஒரு நாள் தான் என்று தான் எல்லாரும் சொல்லுவார்கள். ஆனால் சித்தூர்க்காரர்கள் அப்படிச்சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் எங்க வடசித்தூரில் ரெண்டு நாள் தீபாவளி! ஆமாம், முதல் நாள் எல்லா ஊரையும் போல. ரெண்டாம் நாள் தான் கோலாகலமே. அதற்கு மயிலந்தீபாவளி என்று பெயர். பெயர்க்காரணம் எல்லாம் தெரியாது. ஆனால் சுத்துப்பட்டு கிராமம் (இதெல்லாம் சினிமா டயலாக், எங்க ஊரில் இந்த 'சுத்துப்பட்டு' என்ற வார்த்தையே கேட்டதில்லை) எல்லாம் சித்தூருக்கு வந்துவிடுவார்கள்.

எங்க வீட்டிலிருந்து சும்மா 100 அடி தூரத்தில் ஒரு மைதானம் உண்டு. அங்கே தான் எல்லாக் கொண்டாட்டமும். மேலே இருந்து கீழே வரும் ராட்டின தூரி, தரை மட்டத்தில் சுற்றி வரும் குடை தூரி (மெர்ரி கோ ரவுண்ட்) இன்னும் பலூன், சீக்கி (ஊதல்), மிட்டாய் என்று பாரதிராஜா காண்பித்த எல்லாம் அன்னிக்கு கலர் கலரா பளபளக்கும். வண்ணக் காகிதத்தில் செய்த நிறைய பூச்செண்டுகள், பலூன் வைத்த சீக்கி (இது நாம் ஊதும்போது பலூன் காற்றை வாங்கிப் பெருக்கும், பின் அதுவாக ஊதி சத்தம் போடும்) இதெல்லாம் எனக்குப் பிடித்த விளையாட்டுகள்.

இந்த தூரி வகைகள் அவ்வளவாய் ஈடுபாடில்லை (இன்னிக்கும் amusement park-ல் ரைட் போக ஆசைப்படமாட்டேன், என் மனைவி நான் எல்லார் எஞ்சாய்மென்டையும் கெடுக்கிறேன் என்று முறைப்பாள்!) இத்தனைக்கும் தூரி நடத்துபவர்கள் என் தூரத்து உறவினராய் இருப்பார்கள், இலவச சவாரி கிடைக்கும். என் அண்ணன் நிறைய ரவுண்ட் சுத்தி வருவார். அதிலும் ஆணும் பெண்ணும் போட்டி, சீண்டல், என்று அமர்க்களப் படுத்துவார்கள். ராட்டினத் தூரியில் ஒருவர் தன் பெட்டி கீழே வரும்போது கையில் இருக்கும் அடையாளப்பொருளை வைப்பார்கள், வேறு பெட்டியில் இருப்பவர் அதை லாவகமாக கையில் எடுத்துக்கொள்வார்கள், பதிலுக்கு அவர்கள் ஒன்று வைக்க, இவர்கள் எடுக்க, இது இப்படியே நடக்கும்.

மாலையில் ஆண்கள், (கவனிக்க: முழுக்க முழுக்க ஆண்கள்) ஆடும் கும்மியாட்டம் நடக்கும். கிட்டத்தட்ட ஒயிலாட்டம் போலிருக்கும், ஆனால் அதுவல்ல. நான்றாகப் பாடி கைகொட்டிக் கும்மியடித்து ஆடுவார்கள். அது ஒரு மணி போல நடக்கும்.

இந்த மாதிரி ரெண்டு நாள் தீபாவளி வேறு எங்கும் கொண்டாடுகிறார்களா தெரியவில்லை. ஊரைவிட்டு வந்து 27 வருடம் ஆகிறது சில ஆண்டுகளுக்கு முன் வரை இது நடந்து கொண்டுதானிருந்தது. இன்னும் நடக்கும் என்று நினைக்கிறேன். ரெண்டு வருடம் முந்தி சன் டிவியில் கூட எங்க ஊரின் மயிலந்தீபாவளியை செய்தியாக ஒளிபரப்பினார்கள் என்று கேள்விப்பட்டேன். என்றாவது ஒருநாள் ஒரு மயிலந்தீபாவளிக்கு ஊருக்குப் போவேன் என்று நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...