செவ்வாய், அக்டோபர் 28, 2003

வாழ்க்கைக் கல்வி

அறிவியல் செய்திகள் நிறைய சொல்லும் நம் வெங்கட் இன்று விதிகள்-மீறுபவர்களுக்கு என்ற தலைப்பில் பதிவு (குறிப்பு?) செய்திருக்கிறார். அரசு நிறுவனமான அணு சக்தி (வெங்கட்டுக்கு சகதி என்று தான் வருகிறதாம்:-)) துறையில் நடந்த அதைப் படித்தவுடன் தனியார் நிறுவனத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் நினைவுக்கு வந்தது.

இது நடந்து ஆறு-ஏழு வருடங்கள் இருக்கும். அப்போது ஒரு புது இயந்திரம் ஒன்றை வடிவமைக்க, மற்றும் அந்த இயந்திரத்தை ஆலையில் தயாரிக்க தேவையான கருவிகளையும் உருவாக்கிக் கொடுக்க போர்க்கால அடிப்படையில் ஒரு சிறு குழுவாக என் தலைமையில் இரவு பகலாக வேலைசெய்தோம். பெரும்பாலான நாட்களில் இரவு 8 மணியில்லாமல் வீட்டுக்குப் போக மாட்டோம்.

எங்களுக்கு டீ, காபி, டிபன் வாங்கித்தர ஒரு பையன் (உண்மையிலேயே பையன் மாதிரிதான் இருந்தான்) இருந்தான். ஒரு பதினேழு வயசிருக்கும். அலுவலக வரபேற்பாளரை ' ***அக்கா சொன்னாங்க' அன்றும் எங்கள் சக பெண் அலுவலரை '***அக்கா கேட்டாங்க' என்றும் பாசத்தோடு அவன் அழைப்பான். அவன் பேயர் வேறு என் மகனின் பெயர். இதெல்லாம் கூடி அவன் எங்கள் எல்லாருக்கும் ஒரு செல்லப்பிள்ளையாக வலம் வந்தான்.

அவன் வாங்கிவரும் டீ காபி செலவுகளை அடுத்தநாளே வவுச்சர் போட்டு நிறுவனத்திடமிருந்து வாங்கிவிடவேண்டும் என்று நான் உத்தரவு போட்டிருந்தேன். ஏனென்றால் முன்பு வேறு ஒருவன் வாரம் ஒருமுறை அல்லது இருவாரம் ஒருமுறை வந்து மொத்தமாக வவுச்சர் போடும்போது, எனக்கு உண்மையிலேயே அன்று வாங்கினோமா இல்லையா என்று சந்தேகமாயிருந்தது. இப்படி அடுத்தநாளே கணக்குப்பார்த்தால் ஞாபகத்திலேயே இருக்கும் என்பதால் இந்த உத்தரவு.

அப்படி வவுச்சர் எழுதும்போது அவன் 'ருபாய்................பன்னிரண்டு' என்று எழுதினான். நான் கூப்பிட்டு, இப்படி ரூபாய்க்கும் பன்னிரண்டுக்கும் இடைவெளி விடக்கூடாது. அப்படி விட்டு எழுதினால் வேறு யாராவது அதற்கிடையில் 'நூற்றுப்' என்று எழுதி அதை நூற்றுப் பன்னிரண்டாக்கி ஏமாற்றி ஊழல் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று எடுத்துக்கூறினேன். அவனும் சரி யென்று புரிந்து கொண்டு தலையாட்டினான். இருந்தும் அவ்வப்போது அவன் மறந்து போய் இடைவெளிவிட்டு எழுதுவது கண்டு மீண்டும் மீண்டும் சொல்வேன்.

தொடர்ந்து நாங்கள் கருமமே கண்ணாக உழைத்து வந்தோம். (அந்த இயந்திரம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்று இன்று நிறுவனத்துக்கு நிறைய அன்னிய செலாவணி சம்பாதித்துக் கொடுப்பது மனதுக்கு நிறைவான விஷயம்) ஒரு நாள் நிதித்துறைத் தலைவர் என்னிடம் தொலைபேசியில் 'உங்கள் துறையில் சில்லறைச்செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே' என்று வருத்தப்பட்டார்.

'இருக்க முடியாதே' இது நான். ஏனென்றால் மிஞ்சிப்போனால் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்குள் தான் இருக்கும். மாதத்தில் இருபத்தைந்து நாள் என்று எடுத்துக்கொண்டாலும் ஐந்நூறு ரூபாய் வரும், இது ஒரு செலவா?

'இல்லை, நேற்று மட்டும் இருனூற்று சொச்சம், முந்தானாள் நூற்று சொச்சம்...'

'இல்லவே இல்லை.. அந்த வவுச்சரைக் காட்டுங்கள்'

அப்புறம் தான் தெரிந்தது, நான் எது நடந்து விட வாய்ப்புக் கொடுத்த மாதிரி ஆகிவிடும் என்று பயந்தேனோ, அது நடந்திருக்கிறது. ரொம்ப வளவளக்காமல் விளக்கி விடுகிறேன். அந்தக் 'குழந்தைப் பையன்' தெரிந்தே, திட்டம் போட்டேதான் அப்படி இடைவெளி விட்டு எழுதி இருக்கிறான். என்னிடம் கையெழுத்து வாங்கிய பிறகு இடைச்செருகல் செய்து விளையாடியிருக்கிறான். இப்படி இரு மாதத்தில் அவன் சுருட்டிய பணம் முப்பதாயிரத்துக்கும் மேல்.

ஒவ்வொன்றாக வவுச்சர்களை எடுத்துப்பார்த்தால்த இடைவெளி இல்லாத இடத்தில் ரப்பரால் அழித்தும் எழுதியிருக்கிறான். எண்ணால் எழுதிய இடத்திலும் அழித்து, திருத்தி விளையாடியிருக்கிறான். ஒரு சாதாரண எச்சரிக்கையுணர்வுள்ளவர் கூட அத்தனை அழித்தல் திருத்தலை ஒப்புக்கொண்டிருக்க மாட்டார், ஆனால் மிகுந்த அனுபவமும், நம்பகத்தன்மையும் கொண்ட அந்தக் காசாளர் அத்தனையையும் ஒதுக்கி அவன் தன்னைப் பகடையாய் ஆக்கி விளையாட அனுமதிதிருக்கிறார்! இத்தனைக்கும் அவரும் அதே டீக்கடையில் டீ குடிப்பவர். மிஞ்சிப்போனால் ஒரு நாளைக்கு 4-5 பேருக்கு எவ்வளவு செலவாகும் என்று கூடவா தெரியாது?

அந்தக் குழந்தை அம்மாவுக்கு புடவை வாங்கிக்கொடுத்திருக்கிறது, நகை கூட வாங்கிக்கொடுத்ததாக ஞாபகம். பிறகு விசாரணையில் எல்லாம் வெளிவந்து ஒப்புக்கொண்டான். ஏனோ இந்த ஆளும் உள் என்று என்னைக் கையைக் காட்டவில்லை! (காட்டியிருந்தாலும் யாரும் நம்பப்போவதில்லை என்பது வேறு விஷயம்)

அதற்குமுன் மார்வாடிகளின் நிறுவனத்தில் பணிபுரிந்திருந்த எனக்கு இவ்வளவு எளிதில் ஒரு சிறுவன் ஏமாற்றமுடியும் அளவுக்கு நிதிநிர்வாகம் இருக்க முடியும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. உண்மை சிலசமயம் கற்பனையை விட ஆச்சரியமானது என்பதை அன்று உணர்ந்தேன்.

வெங்கட் சொன்னதைப்போல நானும் இந்த இடத்தில் எப்படி தில்லு முல்லு நடக்க ஏதுவாகிவிடும் என்று விளக்கியிருக்கிறேன், ஆனால் நிர்வாகத்துக்கல்லாமல், திருடனுக்கு! எனக்கு இது ஒரு பாடம். கட்டாயம் நிறுவனமும் பாடம் கற்றுக்கொண்டது. இன்று நினைத்துப்பார்க்கிறேன், அவன் பாடம் கற்றிருப்பானா?

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...