திங்கள், அக்டோபர் 27, 2003

NRI பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

இந்தியாவில் இருக்கும்போது அமெரிக்காவாழ் தமிழர் என்றதும் என் மனதில் ஒரு பணக்கார இந்திய அமெரிக்கர் உருவம் தோன்றும். என் நெருங்கிய நண்பர்களையோ, உறவினரையோ கோவை மாவட்டத்துக்கு வெளியே பார்ப்பதே அரிது, அப்படியிருக்கையில் என் கற்பனை எப்படியிருந்திருக்கும்? சில திரைப்படங்கள், வார இதழ்கள் இவற்றின் மூலம் நான் அறிந்த விஷயங்களை வைத்து உருவாக்கியிருந்த NRI, எல்லாவிதமான ஆட்களையும் கட்டாயம் பிரதிபலிக்க முடியாதுதானே. இன்று நானே அப்படி ஒரு அமெரிக்காவாழ் இந்தியனான பிறகு ஓரளவுக்குப் புரிகிறது, இவர்களில் எத்தனை வகை உண்டு என்று.

நான் அறிந்தவரை, முக்கியமாக மூன்று வகையினராகத் தரம் பிரித்துப் பார்க்க முடிகிறது.

முதலில் ஒரு பத்து-இருபது வருடங்களுக்கு முன் இங்கு வந்து இங்கேயே உறையுரிமை, பிறகு குடியுரிமை என்று தங்கிவிட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப, பொறியியல், மற்றும் விஞ்ஞான வல்லுனர்கள். சிலர் இங்கு மேல்படிப்புக்காக வந்து பிறகு இங்கேயே வேலை தேடிக்கொண்டவர்கள். இவர்களின் குழந்தைகள் இந்த அமெரிக்க சூழ்நிலையிலே வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இணையத்தொடர்பு, இந்திய பலசரக்கு சாமான்கள் ஆகியவை இல்லாத அந்தக்காலங்களில் (நல்ல அரிசி, பருப்பு கூடக் கிடைக்காத நிலை) இவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் மொழியை, இந்திய சமூக சூழலை அறிந்தவர்களாக வளர்க்க மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார்கள். அதில் எல்லாரும் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அப்படியில்லையென்றால் அவர்களைக் குற்றம் சொல்லவும் முடியாது. இவர்களில் பெரும்பாலானோருக்கு திரும்ப நிரந்தரமாக இந்தியா வருவதைப்பற்றி ஆழ்ந்த ஆர்வம் இருப்பதில்லை. வந்தாலும் அவர்களால் சமாளிக்க முடியுமா என்பது எனக்கு ஐயமாகவே இருக்கிறது. இவர்கள் அந்த 'பணக்கார NRI' உருவத்திற்குக் கிட்டத்தில் வருபவர்கள். கொச்சையாக ABCDs (American Born Confused Desis) என்று அழைக்கப்படும் குணாதிசயங்கள் இவர்களின் குழந்தைகளுக்கு ஓரளவேனும் பொருந்தும். இவர்கள் பேச்சு அமெரிக்கப் பொருளாதாரம், இராக், இந்தியாவின் குப்பை அரசியல், எந்த நகர்ப்பகுதியில் கல்வித்தரம் உயர்வு, வீட்டின் கணப்புக்கு எரிவாயு செலவை எப்படிக் குறைப்பது, புல்வெட்ட, பனியைத்தள்ள ஒப்பந்தக்காரனை வைக்கலாமா அல்லது தானே செய்வது நல்லதா... என்று போகும்.

இரண்டாவது வகையினர் இந்தப் பத்து வருடங்களுக்குள் அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாய் வந்த அதிலும் முக்கியமாய் மென்பொருள்-கணினி சம்பந்தப்பட்டவர்கள். குறைந்த கால இடைவெளியில் நிறையப்பேர் வந்திருக்கிறார்கள். இவர்கள் பலர் இப்போது உறையுரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இப்போது தான் பள்ளிக்குப்போக ஆரம்பித்திருக்கும் குழந்தை, பச்சை-அட்டை விண்னப்பத்தின் முன்னேற்றம், ஊரிலிருந்து வந்துள்ள பெற்றோர், இந்த இடத்தில் இன்னும் எத்தனை நாள் போன்றவை இவர்கள் எண்ணங்களையும், உரையாடல்களையும் ஆக்கிரமிக்கும் விடயங்கள். இன்னும் சொந்த ஊர், உறவினர் ஆகியவற்றோடு தொப்புள் கொடி உறவு, புதிதாய் கிளம்பியிருக்கும் 'அக்கரைக்குச் செல்லும் வேலைகள்' ஆகியவை இவர்களை இங்கும் அங்கும் அலைக்கழித்து மன உளைச்சலிலேயே வைத்திருப்பதைப் பார்த்தால் முதல் வகை ஜீவன்கள் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

மூன்றாவது வகை, என்வகை. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களிலிருந்து, தற்காலிகம் என்று பறையறிவிப்போடு அமெரிக்கா வந்துள்ளவர்கள். இவர்களில் நேற்று வந்தவர்களும் இருப்பார்கள்; போன மாதம், போன வருடம் வந்தவர்களும் இருப்பார்கள். ஒட்டுனர் உரிமம், வாடகை வீட்டு ஒப்பந்தக் காலம், ஊருக்கு தொலைபேசிக் கட்டணத்தை எப்படிக் குறைப்பது, இலவச இணையசேவையில் எப்படி தொடர்வது, விசா என்று காலாவதியாகிறது, ஏதாவது பொருள் வாங்கினால் அது இந்தியாவில் வேலை செய்யுமா, சுங்க சோதனைக்கு தப்புமா; பயன் படுத்திய மேசை, இருக்கை, பாய் படுக்கையானாலும் பரவாயில்லை எங்காவது குறைந்த விலையில் (இலவசமாய்க் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி) கிடைக்குமா, இருக்கும் ஒரே வேலைக்கு என்னை வைத்துக்கொள்வார்களா அல்லது அந்தத் தெலுங்கரையோ மராத்திக்காரரையோ வைத்துக்கொள்வார்களா, ஊரில் வாடகைக்கு விட்டு வந்த வீடு எப்படி இருக்கிறதோ - இது மாதிரி ஓடும் இவர்கள் சிந்தனை. இவர்களுக்குத்தெரியும், இங்கு இருப்பதெல்லாம் மாயை, அன்னை பூமியே நிரந்தரம் என்று. இங்கு தங்கள் தங்கலை எவ்வளவு மாதம் நீட்ட முடியுமோ அவ்வளவு நீட்ட எதுக்கும் தயாராய் இருப்பார்கள். நாளைக்கே பெட்டிகட்டச்சொன்னால் அத்ற்கும் தயார். ஊரில் ஒரு வீடு கட்டுவதற்காக இங்கு இருக்கும் காலத்தில் எப்படியாவது சேமிக்கத் தயாராயிருப்பார்கள்.

எனவே இப்போதெல்லாம் அமெரிக்க வாழ் தமிழரைப் பார்க்கும்போது அவர்கள் பேச்சு நடவடிக்கையிலிருந்து இம்மூன்றில் அவர்கள் எவ்வகை என்று தெரிந்து அதற்குத்தக்கபடி உரையாட முயற்சிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...