வியாழன், நவம்பர் 06, 2003

நன்றி நண்பர்களே!

இந்த வாரம் ஒரு டானிக் வாரம். ஏதோ நானும் ஒரு உந்துதலில் ஆரம்பித்து, தொடர்ந்து வலைப்பதித்துக் (பதிந்து என்று எழுதி, மாற்றிவிட்டேன்; பதித்து transitive, பதிந்து intransitive, இங்கு transitive தானே சரி) கொண்டிருக்கிறேன். மற்ற வலைப்பதிவுகளைப் படித்தும் கொண்டிருக்கிறேன். சில சமீபத்து நிகழ்வுகள் மேலும் இதைத்தொடர்ந்து செய்ய ஊக்குவிப்பதாக இருக்கின்றன.

நிகழும் அக்கணமே பதிவு செய்த, என் மகனின் திருவிளையாடல்கள் கொண்ட 'அரிச்சந்திரன் மகன்' என்ற என் பதிவு திசைகள் நவம்பர் இதழில் பிரசுரமாகி இருக்கிறது. 15-20 வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நான் திரு. மாலன் அவர்களை கோவையில் பார்த்திருக்கிறேன். அதற்கப்புறம் தொலைக்காட்சியில் செய்திசார்ந்த நிகழ்ச்சிகளில் பார்த்ததோடு சரி. பலரும் புகழும் அவரின் 'ஜன கண மன' நாவல் கூடப் படித்தில்லை இன்னும். இரு மாதங்களுக்கு முன் திசைகள் வரும் திசையைக் கண்டுகொண்டு இன்னும் சில நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்டு ஒரு வாசகனாகி, மங்கிப்போயிருந்த என் தமிழறிவைப் புதுப்பித்துக்கொள்ள இந்த வலைப்பூவகத்தைத் தொடங்கினேன். இன்று அதே திசைகள் இதழில் நான் எழுதிய ஒன்றும் வெளியாவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. திரு. மாலன் அவர்களுக்கு என் நன்றி.

என்னை ஆஞ்சனேயர் போல் பலம் உள்ளவன் என்றெல்லாம் புகழ்ந்து என் வாத்தியார் கண்ணன் இன்று வாழ்த்துரை வழங்கியுள்ளார். ஆறு மாதங்களுக்கு முன் அவரின் பாசுர மடலை ஒரு விபத்துப்போல் கண்டெடுத்து அதன் மூலமாய் வாழ்வியலிலும், தமிழிலும் ஆர்வம் ஏற்பட்டு இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று உந்துதல் காரணமாய் மேலும் தேட ஆரம்பித்து இன்று இந்த வலைப்பூவில் கிறுக்குகிறேன். அவருக்கு என்றும் என் நன்றி.

நான் மிகவும் மதிக்கும் ஒரு வலைப்பதிவர் பத்ரி சேஷாத்ரி. அவர் தன் வலைப் பக்கத்தில் என் வலைப்பூவுக்கும் ஒரு தொடர்பு கொடுத்து என்னைக் கவுரவப்படுத்தியுள்ளார். கொள்ளை கொள்ளையாய் எழுதி, அவற்றிற்கு கொள்ளை அழகுடன் படங்களும் இணைக்கும் சுபாவும் கவுரவப்படுத்தியுள்ளார். பரிமேழலகர் கல்லூரியில் ராகிங் செய்வதுபோல் சண்டைபோட்டு இன்று உற்ற நண்பராகிவிட்டார். ஒருவாரம் வலைப்பூ கருத்துக் கோவைக்கு ஆசிரியர் வேலைகொடுத்தார் மதி. அதன் மூலம் இன்னும் பலரின் தொடர்பும் கிடைத்தது. இந்த இரண்டுமாதத்தில் எத்தனை புதிய நண்பர்கள்!

இங்கு உறைபனியில் தனியாய் மாட்டிக்கொண்டிருந்த எனக்கு இந்த நட்பு வட்டம் பெரு மகிழ்வளிக்கிறது. இன்னும் நிறையப்படிக்க வேண்டும் என்று ஆர்வமாய் இருக்கிறது. நன்றி நண்பர்களே!

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...