சனி, ஜனவரி 17, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 10


பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பித்தாயிற்று. வீட்டில் இருந்தே போகமுடிந்தாலும், 'செமஸ்டருக்கு கட்டணம் முன்னூறு ரூபாய் தேவைப்படுமே, உங்களால் முடியுமா' என்றுகூட சிலர் கேட்டார்கள். ஆனால் அம்மாவும் அண்ணனும் உறுதியாக இருந்தார்கள். நேர்முகத்தேர்வில் ஒரு வேடிக்கை; 14 வயதாகிய நான், மிகவும் பொடியனாக இருப்பேன். அதுவரை 11ஆம் வகுப்பு தேறியவர்களையே பார்த்துப் பழகியவர்களுக்கு என்னைப் பார்த்ததும் வந்தது ஒரு சந்தேகம்.

நீளமான கான்பரன்ஸ் ரூமில் நடந்தது நேர்முகத்தேர்வு.
'ஏம்ப்பா, இங்கே லேத் மிஷினில் எல்லாம் வேலை செய்யணும், நீ என்ன இவ்வளவு பொடியனா இருக்கிறே, உன்னால் முடியுமா?'
'ஓ, செய்வேனுங்க'
'சரி, எங்கே இந்தச் சேரைத் தூக்கிக் காமி பாக்கலாம்', பக்கத்தில் இருந்த எஸ்-வடிவ பின்னல் நாற்காலியைக் காட்டினார் ஒருவர்.
காந்தியுடன் எடுத்த அந்தப் போட்டோ வைப் பார்த்தால் ஏன் அவர்கள் அப்படிக்கேட்டார்கள் என்பது புரியும். என் மகன் 5ஆம் வகுப்புப் படிக்கும்போது அதே மாதிரி இருக்கிறான்! ஆனது ஆகட்டும் என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு தூக்கினேன். சிரித்துக் கொண்டே ஓகே பண்ணினார்கள்.

வெளியில் வந்ததும் அம்மா 'எங்கே நீ தூக்குவியோ மாட்டியோன்னு நெனச்சேன்' என்றதும், இருவரும் சிரித்ததும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

பாலிடெக்னிக் படிப்புக்கு என்று சில கூடுதல் விஷ்யங்கள் தேவைப்பட்டன. ஷூ தான் அணியவேண்டும் என்றார்கள். பாட்டாவில் உள்ளதிலேயே சிக்கனமாய் ஒன்று வாங்கியபிறகு, நல்லதாக செருப்பு ஒன்று வேணும் என்றதுக்கு என் அண்ணன் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது: 'உனக்குத்தான் ஷூவே வாங்கியாச்சு, இனி எதுக்கு செருப்பு?'

பாடங்கள் மனதுக்குப் பிடித்திருந்தன. ஆனாலும், இந்த கெமிஸ்ட்ரி மட்டும் தகராறு செய்தது. முக்கியக்காரணம், அது ஆங்கில வழியில். கணிதம் மொழிக்கு அப்பாற்பட்டது. இயற்பியலும், வரைபடவியலும் தமிழில் இருந்தது. கேமிஸ்ட்ரி புரிந்தாலும், எழுதும்போது வரவில்லை, மனப்பாடம் செய்யவேண்டியிருந்தது. அதில்தான் நான் வீக்..

அந்தக் காலங்களில் அண்ணனும் அம்மாவும் நிறைய ஓவர்டைம் வேலை செய்வார்கள். அண்ணனுக்கு ஓவர்டைம் செய்யும்போது பேட்டா என்று ஒரு சிறு தொகை தருவார்கள். அதன் நோக்கம் ஒருவேளைச் சாப்பாடுதான். சில நாட்களில் இரவு நேரங்கழித்து வரும்போது, தனக்குக் கிடைத்த பேட்டாவில் எனக்கும் சேர்த்து 'குஸ்கா' வாங்கிவருவார். ஒரு முறை நான் அதற்குள் தூங்கிப்போக, என்னை எழுப்ப முயற்சித்து, முடியாமல் போய், 'பாரு, கஷ்டப்பட்டு இவனுக்கு வாங்கீட்டு வந்திருக்கேன், எந்திரிக்கிறானா பாரு..' என்று சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணினதாய் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

விரும்பிய துறையான இயந்திரவியல் துறையும் இரண்டாம் ஆண்டில் அமைந்தது. இதற்கிடையில் அண்ணனையும் வேலையில் நிரந்தரம் செய்தார்கள். சின்னாம்பாளையத்தில் தில்லைமுத்து, ரகுநாதன், மணிபாரதி, கருப்புச்சாமி என்று சில நண்பர்கள் அமைந்தார்கள். கிரிக்கெட்டெல்லாம் சொல்லிகொடுத்தார்கள். பொள்ளாச்சி பூங்கா நூலகம் அடிக்கடி உலாவும் இடமானது. பல நாள் இரவு எட்டு மணிக்கு பூட்டும்வரை உட்கார்ந்திருப்பேன். பெரிய சிக்கல் இல்லாமல் வாழ்க்கை ஓடியது. டிப்ளமாவுக்கு அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று பெரிய திட்டமெல்லாம் இல்லை. என்னவெல்லாம் செய்யலாம் என்று சொல்லவும் யாரும் இல்லை. ஒன்றில் மட்டும் உறுதியாய் இருந்தேன். வேலைக்குப் போகவேண்டும்!

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...