திங்கள், ஜனவரி 19, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 12


உலகுவுடன் நான் - 199? -ல்

கோவை-பொள்ளாச்சி சாலையில் இரண்டு கம்பெனிகளில் முயற்சிக்குப் பின் மூன்றாவதாக எவரெஸ்ட் நிறுவனத்திற்குப் போனேன். காந்திபுரத்தில் தலைமை அலுவலகம் போகச் சொன்னார்கள். பர்சானல் ஆபீஸர் ஒருவர், வயசானவர், அவரிடம் அப்ளிகேஷன் கொடுத்ததும், அவர் ஒரு சிறு இன்டர்வியூ ஏற்பாடு செய்து, ஆச்சரியமூட்டும்விதமாய் அதில் நல்ல முடிவும் கிடைத்தது. அந்தக் கம்பெனி அப்போது ஸ்டிரைக்கில் இருந்ததால், உடனே வேலைக்கு எடுக்காமல், சோதனை (trial basis) முறையில் என்று சொல்லி மூன்று மாதத்திற்கு என்று எடுத்துக் கொண்டார்கள். எனக்கு மிகவும் பிடித்த டிசைன் டிபார்ட்மென்டில் போட்டார்கள். 300 ரூபாய் ஸ்டைபன்ட், சம்பளம் என்று சொல்வதில்லை. எப்படியோ மூன்றுமாதம் செய்த வேலையில் திருப்தி ஏற்பட்டு, வழக்கமான ட்ரெய்னீயாக 450 ரூபாய் சம்பளத்தில் எடுத்துக் கொண்டார்கள். அதிலும் 50 ரூபாய் பிடித்தம் உண்டு. வருடம் 50 ரூபாய் உயர்வும் உண்டு.

அங்கே கிடைத்தவன் தான் என் நண்பன் உலகு. என்னுடனே டிப்ளமா முடித்திருந்தாலும், என்னைப் போல் இல்லாமல் நேரடியாக அங்கு வந்திருந்ததால், ஏற்கனவே ஒரு வருடம் அங்கு எனக்கு சீனியர். டிப்ளமாவுடன் நின்றுவிடாமல் மேற்கொண்டு நான் படிக்கப் பெரிதும் காரணம் உலகு. சாமானியமாக கோபம் வராது. எல்லாருடைய நியாயங்களையும் அவர்கள் பார்வையிலிருந்து பார்க்கும்/முயற்சிக்கும் எண்ணம் உண்டு. வெளிப்படையான பேச்சு. எல்லாவற்றையும்விட என்மீது தனிப்பட்ட அன்பு, நம்பிக்கை, எல்லாம் உண்டு.

கோவைக்கு அம்மாவைக் கூட்டிவர என்ணியதும் உலகுதான் கவுண்டம்பாளையத்தில் தன் வீட்டருகே ஒரு வீடு பார்த்துக்கொடுத்து உதவினான். அன்று வடக்குப் பார்த்து மேட்டுப்பாளையம் ரோடு பக்கம் போனது, இன்றுவரை தொடர்கிறது. 'நான் ராம்நாட் டிஸ்ட்ரிக்ட்' என்று பெருமையாகச் சொன்னாலும், கோவை மிகவும் பிடித்துப் போயிருந்தது. சினிமாவின் மேல் ஆர்வம் உண்டு. பைத்தியம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஓரளவுக்கு பேர் தெரிந்த ரிலீஸ் படங்களைப் பார்க்க ஆர்வம். வேலை முடிந்து என்னையும் கூப்பிடுவான். ஆனால் நான் தயங்குவேன். பையில் காசில்லாததால் தான் என்று தெரிந்து கொண்டு அவன் காசில் அழைத்துச்செல்வான். படம் பார்த்துவிட்டு சைக்கிளில் திரும்பும்போது, என் சைக்கிளில் லைட் இல்லை என்பதால், குறுக்கு வழியில், போலீஸ் கண்ணுக்குப் படாதவகையில் கூட்டிவருவான். எனக்காகத் தன் சைக்கிளில் லைட் இருந்தாலும் போட மாட்டான். கோவையின் விசேஷ அடையாளமான பேக்கரிக் கடைகளில் டீ சாப்பிட என்றாவது அழைக்கும்போது, நான் தயங்குவதைப் புரிந்துகொண்டு, அவனே செலவு செய்வான்.

இதெல்லாம்விடப் பெரிய உதவி, 1983 மேமாதம் ஒருநாள் அவன் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் விவரித்த செய்தி:
'பார்ட் டைம் பி.ஈ. அட்மிஷனுக்கு இந்த வருடம் நாம் அப்ளை பண்ணமுடியும், தெரியுமா?'
'பார்ட் டைம் பி.ஈ.? அதைப்படித்து என்ன ஆகப் போகிறது? படிக்க எவ்வளவு செலவாகும்?...',

என் சந்தேகங்களை தீர்த்து, அந்த வருடம் அப்ளைபண்ணுவதற்கும் தூண்டுகோலாய் இருந்தான். துக்காராம் என்ற இன்னொரு நண்பனுடன் சேர்த்து நாங்கள் மூவரும் அப்ளை பண்ணினோம். என் அனுபவச் சான்றிதழ் கிடைக்க தாமதமாகவே, துக்காராம் உதவியால்தான் கடைசிநேரத்தில் கிடைத்தது. பிறகு இன்டர்வியூக்கு கூப்பிட்டார்கள். அதற்குப்பின் நடந்ததுதான் சோகம். அந்த வருடம் செலக்ஷனில் உலகுவை முன்னேறிய வகுப்பினர் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்கள். என் நல்ல நேரம் எனக்கு கேட்கப்பட்ட கேள்விகள் சுலபமானதாக இருந்துவிட, எனக்கு ஒபன் கோட்டா எனப்படும் அனைவருக்கும் பொதுவான பிரிவில் கிடைத்துவிட்டது. கடைசியில் உலகு 'வெயிட்டிங் லிஸ்ட் ஒன்று' என்ற நிலையில் நின்றதும், நான் மட்டும் என் 'பின்தங்கிய' பிரிவில் வந்திருந்தால் அவனும் அந்த வருடம் பி.ஈ. படித்திருப்பான் என்பதையும் என்ணும்போது, இந்த பின்தங்கிய அடையாளத்தால் இப்படியும் பிரச்னைவருமா என்று தோன்றியது.

ஆனால் இதற்கெல்லாம் பிறகும் உலகுக்கு என் மேல் இருந்த பிரியம் எவ்விதத்திலும் குறைவில்லை. அடுத்தவருடம் அதே கல்லூரியில் அதே வகுப்பில் சேர்ந்தான். இன்று வெளிநாட்டில் குடும்பத்துடன் இருக்கிறான். எப்படியும் கோவையில்தான் செட்டில் ஆகப்போகிறேன் என்கிறான். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் என்று என்றுதான் தெரியவில்லை. எல்லா NRIக்களையும் போல தாமரை இலைத்தண்ணீராகத் தான் இப்போது இருக்கும் இடத்தில் இருக்கிறான். மீண்டும் எல்லாரும் ஒரே இடத்தில் இருக்க முடிந்தால்...

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...