சனி, ஜனவரி 10, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 4


உயர்நிலைப் பள்ளியில்தான் தேர்வெல்லாம் வைத்தார்கள், தொடக்கப் பள்ளியில் தேர்வு ஒன்றுமே நினைவில் இல்லை. கால், அரை, முழு (முக்கால் ஏன் இல்லை?) ஆண்டுத்தேர்வுகளோடு, இடையில் முன்-காலாண்டு, முன்-அரையாண்டு, இப்படி சேர்த்து 6 முறை தேர்வுகள். 'நம் மண்டையில் என்னவோ இருக்கிறது, மேலேதான் எழுத்தெல்லாம் கிறுக்கல், ஆனால் உள்ளே என்னவோ சரியாய்த்தான் இருக்கிறது', என்று உணரவைத்தவை இந்தத் தேர்வுகள். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் எல்லாம் உண்டு. அதைக் கொண்டுவந்து அம்மா அப்பாவிடம் காட்டி, 'இதில் இந்த இடத்தில் வரிசையா 1 என்று போட்டிருக்கிறது பாருங்க, அப்படின்னா வகுப்பிலேயே நான் தான் முதல் இடம்', என்று சொல்லும்போது அவர்களுக்குக் கிடைத்த சந்தோஷம், வீதியில் அவ்வப்போது தட்டுப்படும் எட்மாஸ்டர், தாங்கள் ஒன்றும் கேட்காமலே, 'பையன் நல்லாப் படிக்கிறான், எப்படியும் அவன் விருப்பம் போல படிக்க வையுங்க', என்று சொல்லிப் போகும்போது கிடைத்த போதை, இதெல்லாம் தான் 'என்ன சிரமம் வந்தாலும், இவர்கள் படிப்பை நிறுத்தக் கூடாது' என்று வைராக்கியத்தை கொடுத்திருக்க வேண்டும்.

படிப்பு ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஆசிரியர்கள் அமைந்தால் எதுவும் எளிதே. புத்தகம் ஒன்றைத்தவிர பெரிதாய் செலவு வைக்க மாட்டார்கள். அதிலும் தமிழாசிரியர்கள்...பெரியவர், சின்னவர் என்று இரண்டுபேர். அதிலும் பெரியவர் வகுப்பு... பிற்காலத்தில் சுகி.சிவம் அவர்கள் டிவியில் பேசிக் கேட்டபோது அப்படியே அவரை நினைவுக்குக் கொண்டுவரும். ஒருமுறை யாரோ ஒரு பையன் செய்யுளுக்கோ, இலக்கணத்துகோ தெரியவில்லை, தேவைப்படும் என்று 'கோனார் தமிழ் உரை'யை டவுனில் இருந்து வாங்கி வந்துவிட்டான். அது அவர் கண்ணில் பட்டதுதான் தாமதம், 'ஏண்டா இதெல்லாம் வாங்கிப் படிக்கறே, அப்ப இங்க நான் ஒருத்தன் என்னத்துக்கு இருக்கிறேன், மொதல்லே அதை வீசி எறிஞ்சிட்டு வா'ன்னு அப்படி ஒரு கோபம்! அவர் அப்படிக் கோபப்பட்டு என்றும் பார்த்ததில்லை.

மாலை பள்ளியில் இருந்து வந்ததும் அண்ணன் பாத்திரம் எல்லாம் கழுவி, விறகுக்கு முள் தரித்து(நறுக்கி) வைக்க வேண்டும். நான் வீடு எல்லாம் கூட்டிப் பெருக்கவேண்டும். பிறகு விளையாட்டுத்தான். ஆனாலும் வீட்டைவிட்டு தூரமாய் எங்கும் விளையாடப் போகக்கூடாது. ஆறு மணிக்கு வீட்டில் லைட்டெல்லாம் போட்டு நடையைத் திறந்துவைக்கவேண்டும் (லட்சுமி வரும் நேரம்!). அதற்குப்பின் தான் கச்சேரியே. 'வினாயகனே வல்வினையே வேரறுக்க வல்லான்..' என்று டூரிங் டாக்கீஸில் பாட்டுச்சத்தம் கேட்டால், வாசலில் கிடக்கும் உரல் சோபாவில் உட்கார்ந்து, ஒவ்வொரு வரியாய் ரசித்து, சத்தம் போட்டுக் கூடப்பாடி...ஏழரையாகும் பாட்டு நிறுத்த. அதுவரைக்கும் நம்ம கச்சேரிதான்.

பிறகு எதையாவது பேசி, சாப்பிட்டு விட்டுத் துங்கப்போகணும், அம்மாவுக்குத்தான் காலையில் சீக்கிரம் எழவேண்டுமே. ஒரு நாளாவது வீட்டில் புத்தகத்தை எடுத்து வைத்துப் படித்ததில்லை. ஒரு வரி எழுதியதும் இல்லை. 'ஏண்டா படிப்பதே இல்லையே?' என்று யாரும் கேட்டதும் இல்லை. 1..1..1 என்ற எண்ணைப் பார்த்தாச்சே. அப்பவே ரிசல்ட்-ஒரியென்டேஷன்:-) வாத்தியார் உள்ளிடுவது அப்படியே ஹார்ட்டிஸ்க்கில் சேமிப்பாகிறது, இடையில் ஃப்ளாப்பி, பேக்கப், ரிஸ்டோர் எல்லாம் எதுக்கு? 'ப்ரின்ட்' என்றால் கடகடவென்று கொட்டப்போகிறது.

இப்படி எட்டாவது வரை கழிந்தது. வழக்கம்போல அந்தக் கோடை விடுமுறையிலும் கோவையில் அம்மச்சி வீட்டுக்குப் போனவன், அங்கிருந்து சித்தூருக்கு வராமல் நேரே பொள்ளாச்சிக்கு வருவேன் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை. யாரிடமும் சரியாய் சொல்லிக்கொள்ளக் கூட முடியவில்லை. அவ்வளவு சீக்கிரம் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எல்லாரையும் விட அம்மாவுக்குத் தான் இந்த மாற்றத்தில் பெரிய நிம்மதி. கடின உழைப்பில் இருந்து விடுதலை. அப்பாவுக்கு வேலை ஓரளவுக்கு நிரந்தரமானதுபோல ஒரு நிலை. அவருக்கு எட்டரை ரூபாய் கூலி. அதுபோக ஓவர்டைம் உண்டு. எனவே நம் சோகத்துக்கெல்லாம் முடிவு வந்துவிட்டது, என்ற சந்தோஷம் முகத்தில் தெரிய வந்த எங்களை பொள்ளாச்சி எல்லையில் கோட்டாம்பட்டி வரவேற்றது. அங்கே 20 ரூபாய் வாடகையில் ஒரு ஒற்றை அறை வீடு. அந்த வரவேற்புக்கும், கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்த போது ஆடி அசைந்து வரவேற்ற(?) கொடிக்கும் இருந்த ஒரு ஒற்றுமை அப்போது யாருக்கும் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...