செவ்வாய், ஜனவரி 13, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 6

அது எமர்ஜென்சியின் இறுதிக் காலம். அப்பாவுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. சித்தூரில் கிடைத்ததை விட அதிகமான செய்தித்தாள்கள் தினமும் நூலகத்தில் மாலையில் படிப்பது, வேலையிடத்தில் தோழர்களுடன் விவாதிப்பது போன்றவற்றால் இங்கு வந்தபின் ஈடுபாடு இன்னும் அதிகரித்தது. 1977 மார்ச்சில் தேர்தல் அறிவிக்கப்பட, பொதுக்கூட்டங்கள் நிறைய நடந்தன. சில முறை நானும்கூட அவருடன் போயிருக்கிறேன். தேர்தல் நாள் நெருங்கியது. சித்தூர் வாக்காளர் பட்டியலில்தான் இன்னும் பெயர் இருந்தது. எனவே தன் வாக்கைப் பதிவுசெய்யவும், பழைய நண்பர்களையெல்லாம் பார்த்துவரலாம் என்றும் சித்தூருக்கு தேர்தல் நாளன்று சென்றுவந்தார்.

அடுத்த நாள் நான் பள்ளியிலிருந்து வரும்போது வீட்டில் உடம்புக்கு சரியில்லை என்று படுத்திருந்தார். அன்னேரத்துக்கு அவர் வீட்டுக்கு வந்து நான் பார்த்ததில்லை. அப்புறம்தான் தெரிந்தது, வேலை செய்யும் இடத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழ, அவர்கள் தான் வீட்டில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். பிறகு நடந்தது எதுவும் கோர்வையாக நினைவில்லை.

பொள்ளாச்சி பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆக்ஸிஜன் உதவியெல்லாம் கொடுத்து, நினைவில்லாமல் கிடந்தார். அதிகம் கோயிலுக்கெல்லாம் போகாத நானும் அம்மாவுடன் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குப் போனது நினைவிருக்கிறது. அம்மா முகத்தில் சோகம் அப்பியிருந்தது. நான் சாமியிடம் ஒரு டீல் போட்டுக்கொண்டேன். 'சாமி, எங்கப்பாவுக்கு ஒண்ணும் ஆகாம சரி பண்ணிட்டீன்னா, இனிமே உன்னைக் கும்பிடறேன், நிந்திக்க மாட்டேன்'னு. ஆனால் சாமிக்கு அதில் ஒண்ணும் பெரிய ஆர்வமில்லை என்பது தெரிந்தது. அப்பா மூன்றாம் நாள் காலமாகிவிட்டார். ஃபுட் பாய்சனிங், சித்தூர் நண்பர்களுடன் சாப்பிட்ட நாட்டுச்சரக்கில் கோளாறு, முன் விரோதம் காரணமான சதி, இதில் ஏதோ ஒன்று, இது தான் காரணம் என்று இன்று வரை தெரியாது.

'ஒருவழியாக நம் சோகத்துக்கெல்லாம் விடிவு பிறந்துவிட்டது' என்று கடந்த பத்து மாதங்களாக விட்ட நிம்மதிப் பெருமூச்சு காற்றில் கரைந்தது. 'சம்பாதித்து, உட்காரவைத்து சோறு போடாவிட்டாலும், கணவன், குடும்பத்தலைவன் என்று பெருமையுடன், பாதுகாப்புடன் இருக்க முடிந்ததே, இனி அதற்கும் வழி இல்லையே', என்று அம்மா அரற்றி, அழுதது நினைவில் இருக்கிறது. இப்படி பலிகொடுப்பதற்கா ஊரைவிட்டு வந்தோம்? இனி என்ன வழி? ஏன் நமக்கு மட்டும் எல்லாம் இப்படி எல்லாமே எதிராகவே வேலை செய்கிறது? இங்கேயே இருப்பதா? இங்கு யாரைத்தெரியும், என்ன செய்ய முடியும்? கேள்விகள், கேள்விகள்..விடை தெரியாக் கேள்விகள்!

அண்ணனுக்கு இன்னு பத்து நாளில் எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வு. 'எப்படி எழுதப்போகிறான்' என்று அனைவரும் பரிதாபப் பட்டனர். அதற்கடுத்து என் ஒன்பதாவது முழுப்பரீட்சை. இரண்டும் முடிந்ததும், அனைவரும் கோட்டாம்பட்டிக்கு விடை சொல்லி, மாமன்மார் ஆதரவில் மேலும் எப்படியாவது எதையாவது செய்யலாம் என்று கோவைக்குப் பயணம் ஆனோம். சித்தூருக்குத் திரும்பிப் போக மனமில்லை. என் படிப்பு மேலும் தொடரவேண்டுமானால், அங்கே போய் பயனில்லை. அண்ணனுக்கு அப்பா வேலை பார்த்த இடத்திலேயே ஏதாவது வேலைக்கு முயற்சிக்கலாம் என்றும் ஆலோசனை கிடைத்தது. அப்பா அங்கே சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயர் கொஞ்சம் நம்பிக்கையளித்தது. அதுவரை, கிடைத்த வேலையை செய்துகொண்டு அங்கேயே அண்ணன் இருப்பது என்று முடிவானது.

நாங்கள் வசித்த வீட்டருகிலேயே திண்ணையில் இலவசமாய்த் தங்கிக்கொள்ள பெரிய மனதுள்ளவர்கள் அண்ணனுக்கு இடம் கொடுத்தார்கள். அது ஒரு புகையிலைக் குடோன். எனவே கொஞ்சம் சுறுசுறுவென்று மூக்கை உறுத்தும், தும்மல் போடும். ஆனால் அதை விட்டால் வேறு வழியில்லை. அம்மாவுடன் கோவைக்குப் போனாலும் என்னைத் தன் வீட்டில் வைத்துக்கொள்ள என் பெரியப்பா முன்வந்ததால், கோடை விடுமுறைக்குப் பின் நான் மீண்டும் பொள்ளாச்சிக்கே வந்துவிட்டேன். பெரியப்பாவுக்கு என்னை விட ஒருவயது மூத்த மகன். கொஞ்சம் படிப்பில் மந்தம், நான் அங்கே இருந்தால் அவனுக்கும் படிப்புக்கு ஒரு தூண்டுகோலாய் இருக்கும் என்ற எண்ணமும் கூட.

மூவரும் மூன்று இடமாய் சிதறிப்போனோம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...