வியாழன், ஜனவரி 15, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 8

ஒரு வருடகாலமாய் பழகிப்போன அரிசிச்சாப்பாடு புதுப்பாளையத்தில் அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் பள்ளிக்கூடத்துக்கு கொண்டுபோக அம்மச்சி அரிசி, அல்லது சாமை இரண்டு மட்டும் செய்துதரும். சாமை, நெல்லஞ்சோத்துக்கு (அரிசிக்கு) உண்ணும் குழம்பு, ரசம் எதனுடனும் ஒத்துக்கொள்ளும். ஆறினபின்னும் பெரிய வித்தியாசம் இருக்காது. ராகி, சோளம் போன்றவை அப்படியல்ல. தோசை பெரும்பாலும் ராகியில் இருக்கும். ராகி ஒரு அற்புதமான தானியம். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ராகியை அரைத்து மாவாக்கிவைத்துக்கொண்டால், களி செய்யலாம். ரக்கிரி (காட்டுக்கீரை) கடைந்து சுடச்சுட ராகிக் களியுடன் உண்டால் நன்றாய் இருக்கும். மேலும், புட்டுமாவு (ஈர மாவில் புட்டு செய்து, தாளித்தது) மிகவும் பிடித்த டிபன். யாராவது விருந்தினர் வந்துவிட்டால், அல்லது அடை மழைக்காலங்களில் குளிருக்கு இதமாக ராகி வடை நன்றாய் இருக்கும். நிறைய சின்ன வெங்காயம், மிளகாய் அரிந்து போட்டு கெட்டியாய் பரோட்டா போல தோசைக்கல் அல்லது வடைச்சட்டியில் சுடும் 'ரொட்டி'யும் அடுப்புக்கருகேயே உட்கார்ந்து சாப்பிட்டால் சொர்க்கம் தான். இப்போதும் நிறைய இடங்களில் ராகி பக்கோடா கிடைக்கிறது. அமெரிக்காவிலும் எங்கள் வீட்டில் என்றாவது கிடைக்கிறது.

பள்ளிக்கு வெளியே படித்துப் பழக்கமில்லாத்தால் மின் விளக்கு இல்லாதது பெரிய குறையாய்த் தெரியவில்லை. ஆனாலும் சித்தூரில் இருந்த அளவு படிப்பு சோபிக்கவில்லை. அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டதாலோ, பஸ் பிரயாணத்தில் ஏற்படும் அலுப்பினாலோ, அந்த அளவுக்கு ஆசிரியர்-மாணவர் இருபாலரிடமும் அக்கறையின்மையோ ஏதோ ஒன்று. கண்ணன் என்று ஒரு சூட்டிகையான பையன் வகுப்பில் இருந்தான். பள்ளியிலிருந்து அரை கி.மீயில் வீடு, அங்கிருந்து நடந்து வரும் அந்த நேரத்திலும், புத்தகத்தை விரித்து, ஒருகையில் பிடித்துக்கொண்டு படிப்பதும், மனப்பாடம் செய்வதும், புத்தகத்தை முதுகுப்புறமாய் மறைத்துக்கொண்டு, மனப்பாடம் செய்ததைச் சொல்லிப் பார்த்துக்கொள்வதுமாய், அவன் படிப்பதைப் பார்க்கையில், 'இதுவல்லவோ படிப்பு' என்று தோன்றும். அதே மாதிரி மாநில அளவில் பள்ளியிறுதித்தேர்வில் அவன் 13ஆம் இடம் பெற்றான், டாக்டருக்குப் படித்தான் என்று நினைக்கிறேன்.

ஒன்பது-பத்தாம் வகுப்புகளில் எனக்குக் கிடைத்த அருமைத்தோழன் எம் ஜி ஆர். அவனும் மறக்க முடியாத ஒரு உதவியைச் செய்தான். அவனது இன்னொரு பெயர் காந்தி. பிறகு கருணைக்கோ, வள்ளல்தன்மைக்கோ கேட்பானேன். அவன் உண்மைப் பெயரைச் சொல்லவில்லையே, உண்மையில் அவன் பெயர் எம். ராமசாமி. அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்ததால் காந்தி என்று செல்லப்பெயர். அதை இடையில் போட்டு, 'நான் எம். காந்தி ராமசாமி, அதாவது எம். ஜி. ஆர்.' என்று சொல்லிக்கொள்வான். அவன் வீட்டில் எல்லாரும் போல நானும் காந்தி என்றுதான் அழைப்பேன். அவன் வீட்டில் அனைவரும் அருமையாகப் பழகுவார்கள். அப்பா ஏதோ வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போதே வீட்டில் போன் வைத்திருப்பார்கள். அங்கு போகும்போதெல்லாம் சாப்பிடாமல் விடமாட்டார்கள்.

நாங்கள் தான் முதன்முதலில் பத்தாம் வகுப்பில் பள்ளியிறுதித்தேர்வு எழுதியவர்கள். அந்த வருடம் எங்கள் சீனியர்கள் 11ஆம் வகுப்பில் பள்ளியிறுதி எழுதினார்கள். ஆக அந்த வருடம் இரண்டுமடங்கு பேர் பள்ளியிறுதியை முடித்தார்கள். எனக்கு தேர்வுசமயத்தில் ஒரு பிரச்னை. தேர்வு நடக்கும் வாரம் பஸ் எல்லாம் ஏதோ காரணத்தால் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பாயிருந்தது. எப்படி புதுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு தினமும் வந்து தேர்வு எழுதுவது? 'நீ பரிட்சை முடியும் வரை இங்கேயே இரு. முடிந்ததற்கப்புறம் போகலாம்' என்று ஆர்டர் போட்டுவிட்டார் காந்தியின் அப்பா. அந்த வாரம் முழுதும் அங்கேயே தங்கிவிட்டேன். எந்தக் கவலையும் இல்லாமல் பரீட்சை எழுதினேன். இரண்டாம் வகுப்புக்குப் பிறகு எடுத்த என் ஒரே போட்டோ அவர்கள் வீட்டில் காந்தியின் மாமா ஒருவர் எடுத்ததுதான்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...